சேலம் கோட்டத்தில் அதிகாரிகள் சோதனை: ரெயில்களில் ஓசி பயணம் செய்த 4,464 பேர் சிக்கினர் ரூ.18¾ லட்சம் அபராதம் வசூல்

சேலம் கோட்டத்தில் அதிகாரிகள் சோதனையில் ரெயில்களில் ஓசி பயணம் செய்த 4,464 பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ.18¾ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.;

Update:2019-07-07 04:30 IST
சூரமங்கலம், 

சேலம் ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, கரூர், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணிகள் யாராவது பயணம் செய்கிறார்களா? என்று அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் சேலம் ரெயில்வே கோட்ட மேலாளர் சுப்பாராவ் உத்தரவின் பேரில் கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகரன் தலைமையில் டிக்கெட் பரிசோதகர்கள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் அடங்கிய குழுவினர் கோட்டத்தில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களில் சோதனை நடத்தினர்.

இதில், எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களில் டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சேலம் ரெயில்வே கோட்டத்தில் நடந்த சோதனையில், ரெயில்களில் ஓசி பயணம் செய்த 4,464 பேர் சிக்கினர். இதையடுத்து அவர்களிடம் இருந்து ரூ.18 லட்சத்து 87 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். இதனால் அவர்களிடம் இருந்து இருமடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்படும். எனவே பயணிகள் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்‘ என்றனர்.

மேலும் செய்திகள்