கணக்கில் வராத ரூ.2¾ லட்சம் பறிமுதல்: வட்டார போக்குவரத்து அலுவலர் உள்பட 11 பேர் மீது வழக்கு

தஞ்சையில் கணக்கில் வராத ரூ.2¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து வட்டார போக்குவரத்து அலுவலர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2019-08-31 22:15 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை அருகே திருச்சி சாலையில் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன், இமயவரம்பன், சசிகலா, தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் மாலையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், புரோக்கர்களிடம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலர் கார்த்திகேயனிடம் ரூ.43 ஆயிரத்து 80-ம், கண்காணிப்பாளர் மீனாம்பாள், கணக்காளர் ராமசாமி ஆகியோர் அறையில் இருந்து 40 ஆயிரத்து 640-ம், முதுநிலை வரைவாளர் வீரமணியிடம் இருந்து ரூ.24 ஆயிரத்து 220-ம் மற்றும் 7 புரோக்கர்களிடம் இருந்தும் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

11 பேர் மீது வழக்கு

மொத்தம் ரூ.2 லட்சத்து 86 ஆயிரத்து 990 பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர், கண்காணிப்பாளர், கணக்காளர், முதுநிலை வரைவாளர் மற்றும் புரோக்கர்கள் ஹரிகரன், விஜயராஜ், முத்துக்குமார், ராஜேஷ், கோகுல், வெங்கட்ராமன், செம்மனச்செம்மல் ஆகிய 11 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்

இந்த பணம் எப்படி வந்தது, எதற்காக கொடுக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பணம் கும்பகோணம் தனி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்