மதுரையில் மசாஜ் சென்டரில் விபசாரம்; 6 பெண்கள் உள்பட 9 பேர் கைது

மதுரையில் மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-09-01 23:30 GMT
மதுரை,

மதுரையில் கடந்த சில மாதங்களாக மசாஜ் சென்டர், ஆயுர்வேதிக் சிகிச்சை மையம், ஸ்பா, ஹெல்த்கேர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக புகார்கள் வந்தன. இதனால் அவ்வாறு செயல்படும் மையங்களை ஆய்வு செய்து கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையே காளவாசல் பகுதியில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பெண்களை வைத்து விபசாரம் செய்து வருவதாக எஸ்.எஸ்.காலனி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில் போலீசார் அந்த பகுதிகளுக்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது, கேரளா மற்றும் சென்னையை சேர்ந்த பெண்களை அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. அங்கிருந்தவர்களிடம் விசாரித்தபோது, வெளி மாநிலங்களை சேர்ந்த பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய திண்டுக்கல்லை சேர்ந்த கார்த்திக் முருகன்(வயது 27), கேரளாவை சேர்ந்த ஸ்ரீரவன், சென்னையை சேர்ந்த காயத்திரி, நாகேஸ்வரி, ஜோபிதா ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த பணம் வசூல் செய்யும் ஸ்வைப் மிஷின் மற்றும் 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுபோல், அதே பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் வைத்து விபசாரம் செய்ததாக அதன் உரிமையாளர்கள் பிரின்ஸ் இம்மானுவேல், கனிமொழி, திவ்யா, சத்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மசாஜ் சென்டரில் வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்