தென்காசி, கடையம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன

தென்காசி, கடையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தப்பட்டது. விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்பட்டன.

Update: 2019-09-03 21:30 GMT
தென்காசி, 

தென்காசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காசிவிசுநாத சுவாமி கோவில் முன்பு, வாய்க்கால் பாலம், செண்பக விநாயகர் கோவில் தெரு, கூழக்கடை பஜார் பகுதியில் பிரமாண்டமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்பட்டு வந்தது. இந்த சிலைகள் நேற்று மாலையில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இந்த ஊர்வலத்துக்கு இந்து முன்னணி மாவட்ட தலைவர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். ஊர்வலத்தில் பா.ஜனதா நகர தலைவர் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர்கள் சங்கரபாண்டியன், கருப்பசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். சிலைகள் ரதவீதிகள் சுற்றி யானைப்பாலம் ஆற்றில் விஜர்சனம் செய்யப்பட்டன.

வாசுதேவநல்லூர் அனைத்து சமுதாய பொதுமக்கள் சார்பில் 19-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 8 விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலத்தை இந்து முன்னணி மேற்கு மாவட்ட தலைவர் ஆறுமுகசாமி தொடங்கி வைத்தார். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று படித்துறை கருப்பசாமி கோவிலில் விஜர்சனம் செய்யப்பட்டது. ஊர்வலத்தில் மகாத்மாகாந்தி சேவாசங்க தலைவர் தவமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கடையம் அருகே உள்ள கீழக்கடையம் வடக்கு உடையார் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவில் காப்பு கட்டும் நிகழ்ச்சி, தீபாராதனை, பாபநாசத்தில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வரும் நிகழ்ச்சி, கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம், சிறப்பு அன்னதானம், 1,008 எலுமிச்சை விளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்று கடையம் வடபத்துகுளத்தில் விஜர்சனம் செய்தனர்.

மேலும் செய்திகள்