திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது தங்க நகைகள், பித்தளை பொருட்கள் பறிமுதல்

திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 5 பேர் கைது தங்க நகைகள், பித்தளை பொருட்கள் பறிமுதல்.

Update: 2019-09-16 23:00 GMT
வரதராஜன்பேட்டை,

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், இரும்புலிக்குறிச்சி, குவாகம், செந்துறை ஆகிய பகுதிகளில் அடிக்கடி வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவம் நடைபெற்றுக்கொண்டே இருந்தது. இது சம்பந்தமாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்த திருட்டு வழக்குகளை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின்பேரில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ் ஆலோசனைபடி, ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், நடேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, ஏட்டுகள் செந்தில்குமார், மணிவண்ணன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய நத்தக்குழி கிராமத்தை சேர்ந்த ரவி(வயது 49), கொடுக்கூர் கிராமத்தை சேர்ந்த வடிவேல்(50), கார்த்திக்(27), பெரியாக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த சங்கர்(30), அலாரம்குடிகாடு கிராமத்தை சேர்ந்த ஆனந்த்(35) ஆகிய 5 பேரை பிடித்து ஆண்டிமடம் சந்தைதோப்பு மற்றும் ஆண்டிமடம் பஸ் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 8 பவுன் தங்க நகைகள், 42 கிலோ பித்தளை பொருட்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டு வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தொடர்ந்து திருடப்பட்ட நகைகள் மற்றும் பொருட்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

மேலும் செய்திகள்