திருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு கடத்திய 800 கிலோ ரே‌‌ஷன் அரிசி பறிமுதல்; 2 பேர் கைது

திருப்பத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு காரில் கடத்த முயன்ற 800 கிலோ ரே‌‌ஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் கார் மோதியதில் போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.

Update: 2019-11-08 22:30 GMT
மத்தூர்,

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து நாட்றாம்பள்ளி வழியாக கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த காரின் முன்புறம் ஒரு நம்பர் பிளேட்டும், பின்புறம் வேறு ஒரு நம்பர் பிளேட்டும் இருந்தது.

இதை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து சந்தேகம் அடைந்து அந்த காரை நிறுத்த முயன்றனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றது. இதனால் போலீசார் அந்த காரை விரட்டி சென்றார்கள். மேலும் மத்தூர் போலீசாருக்கு இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் கண்ணண்டஹள்ளி பகுதியில் போலீஸ்காரர் செல்வம் மற்றும் போலீசார் தடுப்பு கம்பிகளை அமைத்து காரை நிறுத்த காத்திருந்தனர். அந்த நேரம் கார் வேகமாக வந்து தடுப்பு கம்பிகள் மீதும், போலீஸ்காரர் செல்வம் மீதும் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் செல்வம் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்த போலீசார் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே மின்னல் வேகத்தில் சென்ற கார் மத்தூர் அருகே வாகன சோதனையில் நின்ற போலீசாரிடம் சிக்காமல் அங்கிருந்து சென்றது. இதையடுத்து சாமல்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாமல்பட்டி போலீசார் அந்த பகுதியில் ரெயில்வே மேம்பாலத்திற்கு கீழே உள்ள பாலம் வழியாக கார் வரும் என்பதை அறிந்து அந்த பகுதியில் லாரிகளை நிறுத்த சொன்னார்கள். இதனால் வேகமாக வந்த கார் அங்கிருந்து தப்ப முடியாமல் சென்றது.

இதைத் தொடர்ந்து போலீசார் காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அதில் காரில் 800 கிலோ ரே‌‌ஷன் அரிசி பெங்களூருவுக்கு கடத்தி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து காரில் இருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினார்கள். அதில் ஒருவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அருண் (வயது28), மற்றொருவர் 16 வயது சிறுவன் என்பதும், அந்த காரை ஓட்டிச் சென்றது அந்த சிறுவன் என்றும் தெரிய வந்தது.

பின்னர் 800 கிலோ அரிசி மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அரிசியை கடத்திய அருண் மற்றும் சிறுவனை கைது செய்தனர். இதன் பிறகு ரே‌‌ஷன் அரிசி, கார் ஆகியவை கிரு‌‌ஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட 2 பேரும் உணவு பொருள் கடத்தல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்