ஓசூரில் 6 இடங்களில் கைவரிசை காட்டிய தந்தை-மகன் கைது 82 பவுன் நகைகள் மீட்பு

ஓசூரில் 6 இடங்களில் கைவரிசை காட்டிய தந்தை-மகனை போலீசார் கைது செய்தனர். அவர்களிட மிருந்து 82 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.

Update: 2019-11-09 23:00 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பழைய குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் உத்தரவிட்டார். அதன்பேரில், ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, ஓசூர்்-தளி ரோட்டில் ரெயில்வே கேட் ஜங்ஷன் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ரிங்ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

நகை-பணம் கொள்ளை

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் வண்டியை ஓட்டி வந்த நபர் தர்மா என்ற ராஜூ(வயது 23) மற்றும் உடன் வந்தவர் பிரகாஷ் என்ற குண்டா பிரகாஷ்(48) என்பதும் தெரியவந்தது. கர்நாடக மாநிலம் கோலார் அருகே உள்ள திருமலட்டி கிராமத்தை சேர்ந்த இவர்கள் தந்தை-மகன் ஆவார்கள். தற்போது இருவரும் ஓசூர் பகுதியில் வசித்து வருகிறார்கள்.

மேலும் இவர்கள் ஓசூரில் பல்வேறு இடங்களில் கடந்த 2 மாதங்களாக பூட்டியிருந்த 6 வீடுகளின் கதவுகளை உடைத்து நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்ததை விசாரணையில் ஒப்புக்கொண்டனர். இருவர் மீதும் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், மத்திகிரி போலீஸ் நிலையத்தில் 2 வழக்குகளும், ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் 1 மற்றும் ராயக்கோட்டையில் ஒரு வழக்கு என மொத்தம் 6 வழக்குகள் உள்ளன.

தந்தை-மகன் கைது

இதைத் தொடர்ந்து தந்தை-மகன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த 6 வழக்குகளிலும் தொடர்புடைய 82 பவுன் நகைகள், 200 கிராம் வெள்ளிப்பொருட்கள் மீட்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் 20 லட்சம் ஆகும். மேலும் இவர்கள் இருவர் மீதும், பெங்களூரு நகர், பெங்களூரு மாவட்டம் மற்றும் கோலார் மாவட்டத்திற்குட்பட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்