இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் ஆமைக்குஞ்சுகள் பறிமுதல்

இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2 லட்சம் ஆமைக்குஞ்சுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-11-24 23:15 GMT
திருச்சி,

இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களுடைய உடைமைகளை திருச்சி விமான நிலையத்தில் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது 2 பயணிகள் தங்கள் உடைமைகளில் மறைத்து ஆமைக்குஞ்சுகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அவர்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த சுலைமான் (வயது 42), அப்துல் ரவூப் (36) என்பதும், மருத்துவ பயன்பாட்டிற்கு விற்பதற்காக அவற்றை கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஆமைக்குஞ்சுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த ஆமைக்குஞ்சுகளை, வனத்துறையினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். மேலும் அவற்றை கடத்தி வந்த 2 பேரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்