குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் - ரூ.1 லட்சம் அபராதம்

வேலூரில் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் எடையிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2019-12-09 22:15 GMT
வேலூர், 

வேலூர் மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகள், குடோன்களில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் சண்முகசுந்தரத்துக்கு புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்யவும், அக்கடைகளுக்கு, ‘சீல்’ வைக்கவும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் அடங்கிய குழுவினர் நேற்று வேலூர் சுண்ணாம்புகாரத்தெரு, மண்டிவீதி, அரசமரப்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், குடோன்கள் ஆகியவற்றில் ஆய்வு செய்தனர்.

அப்போது அரசமரப்பேட்டை பகுதியில் உள்ள 10 குடோன்களை ஆய்வு செய்தனர். மேலும் ஜி.சி.எம். தெருவில் ஒரு குடோனில் அதிகாரிகள் சோதனை செய்தனர். அங்கு, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள், ஸ்பூன்கள், தட்டுகள் உள்பட பல்வேறு பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.

அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கிருந்த சுமார் 3 டன் எடையிலான பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும், என அதிகாரிகள் தெரிவித்தனர். குடோன் உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் அதனை பெற்று கடைகளில் விற்கும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் செய்திகள்