ஓசூர் வழியாக கடத்த முயன்ற ரூ.20 லட்சம் எரிசாராயம் பறிமுதல் 2 பேர் கைது

ஓசூர் வழியாக கடத்த முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-18 23:00 GMT
கிரு‌‌ஷ்ணகிரி,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வழியாக எரிசாராயம் கடத்தப்படுவதாக மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு முரளி தலைமையில் ஒரு தனிப்படை போலீசாரும், இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் தலைமையில் மற்றொரு தனிப்படை போலீசாரும் ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடி பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியில் இருந்து ஓசூர் நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது. போலீசார் அந்த லாரியை நிறுத்தி அதில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் லாரியில் தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்படும் ரசாயனம் கொண்டு செல்வதாக கூறினார்கள். மேலும் அவர்கள் 2 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் எழுந்தது.

2 பேர் கைது

இதையடுத்து போலீசார் லாரியின் பின்புறம் கட்டப்பட்டிருந்த தார்பாயை அகற்றி பார்த்த போது உள்ளே 550 கேன்களில் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது. ஒவ்வொரு கேனிலும் 35 லிட்டர் முதல் 40 லிட்டர் அளவிற்கு எரிசாராயம் இருந்தது. மொத்தம் 20 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் லாரியில் கடத்தி வரப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த 2 பேரிடமும் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அதில் அவர்கள் அரியானா மாநிலம் குர்கானில் இருந்து கேரள மாநிலத்திற்கு எரிசாராயத்தை கடத்தி செல்ல முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து எரிசாராயம் கடத்தியதாக ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கோவிந்தரெட்டிப்பள்ளியைச் சேர்ந்த அப்பாதுரை என்பவரின் மகன் சிவய்யா (வயது 30), சித்தூர் மாவட்டம் பி.சி.கண்டிகா பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் மோகன் (32) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இதையடுத்து கைதான 2 பேரிடமும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்