ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அபராதம் : சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலைமிரட்டல் விடுத்த வாலிபர் கைது

மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்ததால் அபராதம் விதித்த சப்- இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2020-01-21 23:00 GMT
கோவை,

கோவையில் விபத்து மற்றும் குற்ற சம்பவங்கள் நடப்பதை தடுக்க போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை உக்கடம் பைபாஸ் சாலையில் கடந்த 17-ந் தேதி உக்கடம் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணியாமல் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தார். உடனே போலீசார் அவரை தடுத்து நிறுத்தி போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதித்தனர்.

கொலை மிரட்டல்

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், என்னை விசாரிக்க நீ யார்? ஹெல்மெட் அணியாமல் வந்த என்னை கலெக்டர் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றுக்கூறி சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் அவர், சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.

இந்த சம்பவத்தை சப்-இன்ஸ்பெக்டர் தனது செல்போனில் வீடியோ எடுத்தார். உடனே அந்த நபரும் தனது செல்போனில் சப்-இன்ஸ் பெக்டரை வீடியோ எடுத்தார். பின்னர் அந்த நபர் அபராத தொகையை கட்டாமல் சென்றுவிட்டார்.

வாலிபர் கைது

இது குறித்த புகாரின் பேரில் உக்கடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில், அந்த நபர் கோவை தெற்கு உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த இஸ்மாயில் (வயது 32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து இஸ்மாயிலை போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவரை கோவை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வந்ததோடு, சப்-இன்ஸ்பெக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்து இஸ்மாயில் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்