திருவாரூரில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி வாலிபர் கைது

திருவாரூரில் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

Update: 2020-01-22 22:30 GMT
திருவாரூர்,

திருவாரூர் பகுதியை சேர்ந்தவர் தேவி(வயது45).(பெயர் மாற்றப்பட்டு உள்ளது). இவர் தனக்கு சொந்தமான மாட்டை ஆற்றங்கரை பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். நேற்று முன்தினம் மாலை மேய்ச்சலுக்கு சென்ற மாடு வீடு திரும்பாததால் தேவி தனியாக மாட்டை தேடி ஆற்றங்கரை பகுதிக்கு சென்றார்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த தேவூர் பகுதியை சேர்்ந்த செல்வம் மகன் ராஜா(வயது 22) தேவியை மறித்து பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த தேவி சத்தம் எழுப்பினார். இதில் ஆத்திரமடைந்த ராஜா, தேவியை தாக்கியதாக கூறப்படுகிறது. தேவியின் சத்தம் கேட்டு அங்கு மக்கள் ஓடி வந்தனர். மக்களை கண்டதும் ராஜா மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். தாக்குதலில் காயமடைந்த தேவி ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கைது

இது குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ராஜா விட்டு சென்ற மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, மோட்டார் சைக்கிள் எண் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த ராஜாவை போலீசார் கைது செய்து திருவாரூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ராஜாவை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும் செய்திகள்