பிறமாநிலங்கள் சென்று வேலூர் திரும்பும் டிரைவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்தால் வாகனங்கள் பறிமுதல்

பிறமாநிலங்களுக்கு சென்று வேலூர் திரும்பும் டிரைவர்கள் மருத்துவ பரிசோதனைக்கு மறுத்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2020-04-27 04:03 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் பத்தலப்பள்ளி, சைனகுண்டா, பரதராமி, கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு, பொன்னை (மாத்தாண்டகுப்பம்) ஆகிய 6 பகுதிகளில் மாநில போக்குவரத்து சோதனைச்சாவடிகள் உள்ளன. இதில், சைனகுண்டா, பொன்னை ஆகிய சோதனைச்சாவடிகள் மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மூடப்படுகிறது. இந்த சோதனைச்சாவடிகள் வழியாக இருசக்கர வாகனம் உள்பட எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படாது.

சைனகுண்டா சோதனைச்சாவடி வழியாக வரும் வாகனங்கள் பரதராமி சோதனைச்சாவடி வழியாகவும், பொன்னை வழியாக வரும் வாகனங்கள் கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு சோதனைச்சாவடிகள் வழியாக அனுமதிக்கப்படும். வேலூர் மாவட்டத்தில் இருந்து வடமாநிலங்களுக்கு சென்ற 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தற்போது வேலூர் திரும்பி வந்துள்ளன. இந்த வாகனங்களை ஓட்டி வந்த டிரைவர்களுக்கு வேலூர் அரசு பென்லேன்ட் மருத்துவமனை மற்றும் அலமேலுமங்காபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கொரோனா பரிசோதனை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது.

பரிசோதனைக்கு மறுத்தால் வாகனங்கள் பறிமுதல்

அதேபோன்று பிறமாநிலங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு திரும்பி வந்து கொண்டிருக்கிற வாகனங்களின் டிரைவர்கள் பத்தலப்பள்ளி, பரதராமி, கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு ஆகிய சோதனைச்சாவடிகள் மற்றும் பூட்டுத்தாக்கு வழியாக வரும்போது அருகேயுள்ள சிறப்பு மருத்துவ முகாம்களில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனைக்கு பின்னர் டிரைவர்கள் 24 மணி நேரம் சேர்க்காடு அரசு மேல்நிலைப்பள்ளி, காட்பாடி சன்பீம் மெட்ரிக்குலேஷன் பள்ளி, பரதராமி அரசு உயர்நிலைப்பள்ளி, பத்தலப்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அலமேலுமங்காபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்படுவார்கள்.

அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர், தங்கும் வசதி உள்ளிட்டவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் டிரைவர்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்படுவார்கள். மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்க மறுக்கும் டிரைவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்றாலும் வெளிமாநிலங்களுக்கு சென்று வந்த டிரைவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்