மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் தடுப்பு கம்பியை தலையால் முட்டித்தள்ளிய வாலிபர்

தேனியில் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்த விரக்தியில், சாலையில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு கம்பியை வாலிபர் ஒருவர் தலையால் முட்டித் தள்ளினார். இந்த சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2020-04-30 03:50 GMT
தேனி,

கொரோனா பாதிப்பு எதிரொலியாக தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, சாலைகள் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி பொம்மையகவுண்டன்பட்டி சாலை பிள்ளையார் கோவில் அருகில் இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.

இந்நிலையில், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்த தினகரன் (வயது 26) என்பவர் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் நேற்று தேனிக்கு வந்தார். அப்போது பொம்மையகவுண்டன்பட்டியில் அந்த மோட்டார் சைக்கிளை போலீசார் வழிமறித்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தினகரனிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால், அவருடைய மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கம்பியில் முட்டினார்

இதனால், ஆத்திரம் அடைந்த தினகரன் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர் அவர் அங்கு இருந்த இரும்பு தடுப்பு கம்பியை (பேரிகார்டு) தனது தலையால் முட்டித் தள்ளினார். தொடர்ந்து மற்றொரு தடுப்பு கம்பியில் மாறிமாறி முட்டிக் கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவரையும், அவருடைய தந்தையையும் போலீசார் அல்லிநகரம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக அவர்கள் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர், அவர்கள் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

தந்தையின் மொபட்

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘போலீசாரிடம் வாக்குவாதம் செய்து தடுப்பு கம்பியில் முட்டிய தினகரனின் தந்தை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மொபட்டில் தேனிக்கு வந்துள்ளார். அப்போது அவருடைய வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து விட்டனர். அந்த மொபட்டை திரும்ப பெறுவதற்காக இருவரும் தேனிக்கு வந்துள்ளனர்.

இந்தநிலையில் வாகன தணிக்கை செய்த போலீசாரிடம் இந்த விவரங்களை தெரிவிக்காமல், காய்கறி வாங்க செல்வதாக கூறியுள்ளார். முதலிலேயே உண்மையை சொல்லி இருந்தால் எச்சரித்து அனுப்பி வைத்து இருக்கலாம். உண்மையை மறைத்து தகராறு செய்ததால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகள்