அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பரை கொல்ல முயற்சி ; வாலிபர் கைது

திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து நண்பரை கொல்ல முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-25 04:23 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் மந்தக்கரை தெருவை சேர்ந்தவர் ஏழுமலை மகன் வெங்கடேசன் (வயது 26). இவருடைய நண்பர் திருக்கோவிலூர் புதுத்தெருவை சேர்ந்த சீனுவாசன் மகன் குரு என்கிற குருபிரசாத்(28). சம்பவத்தன்று இவர்கள் இருவரும், தங்களது நண்பர்களுடன் சேர்ந்து திருக்கோவிலூர் அஷ்டலட்சுமி நகர் பகுதியில் மது அருந்திக்கொண்டிருந்தனர்.

அப்போது வெங்கடேசனுக்கும், குருபிரசாத்துக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குருபிரசாத், வெங்கடேசனை மதுபாட்டிலால் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆத்திரம் தீராத குருபிரசாத், மருத்துவமனைக்கு சென்று வெங்கடேசனை அங்கிருந்த கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்ய முயன்றார். இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணைபோலீஸ் சூப்பிரண்டு மகேஷ், இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து குருபிரசாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்