சிவகாசி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை கணவன் கைது

சிவகாசியில் இளம்பெண்ணை கழுத்தை அறுத்து கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-06-27 04:46 GMT
சிவகாசி,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பள்ளப்பட்டி இந்திராநகரை சேர்ந்தவர் சரவணக்குமார் (வயது 24). இவருக்கும் ஜெயலட்சுமி (22) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இருவரும் வேறு, வேறு பட்டாசு ஆலைகளில் கூலி தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கயல்விழி என்ற 9 மாத பெண் குழந்தை உள்ளது.

இந்தநிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று காலையிலும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இருவரும் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளனர்.

கழுத்தை அறுத்து கொலை

இதற்கிடையே மதியம் 1.30 மணிக்கு மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சரவணக்குமார், ஜெயலட்சுமியின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகாசி துணை போலீஸ்சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் ஆகியோர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இது குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜ் சம்பவம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்தினார். மனைவியை கொலை செய்த சரவணக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்து அவரை கொன்றதாக தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்