சென்னை விமான நிலையத்தில் ரூ.40 லட்சம் போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் இருந்து பெண்கள் உள்ளாடை பார்சலில் மறைத்து ஆஸ்திரேலியாவிற்கு கடத்த முயன்ற ரூ.40 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-09-08 21:48 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு அனுப்புவதற்காக பார்சல்கள் செல்ல வந்திருந்தன. இந்த பார்சல்கள் மூலம் பெருமளவு போதை பவுடர் கடத்தப்பட இருப்பதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சரக்கக பிரிவில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது, ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக முதுகு வலிக்கான பெல்ட்கள், பெண்கள் உள்ளாடைகள், வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் கோப்பைகள் உள்ளிட்டவைகள் அடங்கிய 2 பார்சல்கள் இருந்தன.

4 கிலோ பொருள்

இதைத்தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் பார்சல்களை பிரித்து பார்த்தனர். அப்போது இடுப்பு வலிக்கான பெல்ட், பெண்கள் உள்ளாடை பார்சல், கோப்பைகள் ஆகியவற்றில் ‘பெஸ்டோபெகிட்ரீன்’ என்ற விலைமதிப்புடைய போதை பவுடர்கள் கொண்ட பாக்கெட்டுகள் மறைத்து வைத்து கடத்த முயன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.

4 கிலோ எடை கொண்ட இவற்றின் மதிப்பு ரூ.40 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதையடுத்து போதை பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கூரியர் அலுவலகத்தில் போதை பொருட்களை அனுப்ப வந்த சென்னையை சேர்ந்த 30 வயது வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்