தென்காசி சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

தென்காசியில் இயங்கிவரும் அரசு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தில் 2 மாதங்களில் 1000 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். உயிரிழப்பு யாருக்கும் இல்லை.

Update: 2020-09-27 22:45 GMT
தென்காசி,

கொரோனா தொற்று பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை துரிதமாக எடுத்தன. முக்கியமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் வீட்டை விட்டு வெளியே வந்தாலும் சமூக இடைவெளியில் இருக்க வேண்டுமென்று பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற நிலையிலும் அரசு ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை அனுமதித்து அவர்களுக்கு நோயை கட்டுப்படுத்த பல்வேறு சிகிச்சைகள் எடுக்கப்பட்டன. இதில் பல உயிரிழப்புகளும் நடந்துள்ளன இன்னும் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தநிலையில் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் அரசுக்கு கருத்து தெரிவித்தனர் இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சித்த மருத்துவ சிகிச்சை தொடங்கப்பட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முதன்முறையாக தென்காசி கொடிக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கல்லூரி வளாகத்தில் சித்தமருத்துவ சிகிச்சை மையம் கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இந்த சிகிச்சை மையம் குறித்து இதன் முதன்மை சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் கலா கூறியதாவது:-

கொரோனா வைரஸை அழிப்பதற்கோ, உடலில் தொற்றாமல் முன்கூட்டியே தடுப்பதற்கோ மருந்துகள் இல்லாத நிலையில் நமக்கு இருக்கும் ஒரே வழி நம் உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதே ஆகும். அந்த வகையில் சித்த மருத்துவம் பொது மக்களுக்கு கொரோனா பயத்தை அறவே போக்கி மக்களுக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. நோய்எதிர்ப்பாற்றல் திறம்பட செயல்பட்டால் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பை பெருமளவில் குறைத்துவிட முடியும். உணவு, மருந்து மற்றும் உடற்பயிற்சி மூலம் நமது நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க முடியும். சித்தர்கள் கூறிய மருந்துகள், வாழ்க்கை முறைகள், மூச்சுப் பயிற்சிகள் மூலம் இந்த நோய் தொற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். தமிழக அரசு ஆரோக்கியம் என்ற திட்டத்தின் மூலம் ஆயுர்வேத, சித்த மருந்துகளை பரிந்துரைத்துள்ளது. நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் இரண்டும் சித்த மருத்துவ முறையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும் மருந்துகள் ஆகும்.

இந்தநிலையில் தென்காசியில் செயல்பட்டு வரும் சித்த மருத்துவ மையம் இப்பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகவும் சிறப்பான முறையில் சேவை அளித்து வருவது இப்பகுதி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதுடன் நமது பாரம்பரிய வைத்திய முறையான சித்த மருத்துவத்தின் மீது மிகுந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த மையத்தில் இது வரை 1157 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1083 பேர் பூரண நலம் பெற்று வீடு திரும்பியுள்ளனர். தென்காசி மாவட்ட கலெக்டரின் தனிப்பட்ட கவனத்தினாலும், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் உஷா அறிவுரையின் பேரிலும் எனது நேரடி மேற்பார்வையில் மருத்துவ குழுவினர் சிறந்த முறையில் செயல்பட்டு வருவதால் நோயாளிகள் பூரண குணம் அடைந்து வருகிறார்கள்.

திருமூலர் யோகா பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இவை சுவாசத்தை சரி செய்யவும், உள் உறுப்புகளை பலப்படுத்தவும், உறக்கம் மற்றும் மன அமைதிக்காக பயிற்சி அளிக்கப்படுகின்றன. இன்பினிட்டிவ் வாக்கிங் என்று கூறப்படும் “8“ வடிவ நடைப்பயிற்சி அளிக்கப்படுகிறது இதனால் உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சி தருகிறது. தென்காசி கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் இதுவரை உயிரிழப்பு எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இங்கு சிகிச்சை பெற்ற பலரும் இந்த சிகிச்சை மையத்தையும், மருத்துவ குழுவினரையும் மகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

மேலும் செய்திகள்