கடனை வசூலிக்கும் போது விவசாயிகளின் பொருட்களை வங்கிகள் ஜப்தி செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம்
கடனை வசூலிக்கும் போது விவசாயிகளின் பொருட்களை வங்கிகள் ஜப்தி செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:- தமிழகம் முழுவதும் பருவமழை பொய்த்து விட்டதால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் கடன் வாங்கி விவசாயம் செய்த பலர் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக செய்திகள் வெளிவருகின்றன. எனவே தமிழகத்தில் விவசாயிகள் தற்கொலையை தடுக்கவும், வங்கிகள் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய உத்தரவிட வேண்டும்.
இந்த மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிபதிகள் முன்பு வந்தபோது இதே போன்ற வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. எனவே மனுதாரர் இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து பரிகாரம் பெற்றுக் கொள்ளலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி மனுதாரர் இதே மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கடன் வசூல் நடவடிக்கையின் போது விவசாய பொருட்களை ஜப்தி செய்யக்கூடாது, கடன்களை வசூலிக்கும் போது கண்டிப்புடன் நடக்கக்கூடாது, விவசாயிகள் நலன் சார்ந்த விவகாரத்தில் முன் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.