உச்சத்தை நோக்கிச் செல்லும் விலை உயர்வு : பெட்ரோல், டீசல் வரி குறைப்பு இல்லை

‘பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வாய்ப்பு இல்லை’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.

Update: 2018-09-05 00:15 GMT
புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலைகள் இதுவரை இல்லாத அளவுக்கு தினந்தோறும் புதிய உச்சத்தை தொடும் வகையில்  அமைகின்றன.

அந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.82.24-க்கு விற்பனை ஆனது. நேற்று இது மேலும் 17 காசு உயர்ந்து ரூ.82.41 என்ற புதிய உச்சத்தை எட்டியது.

இதே போன்று டீசலும் சென்னையில் நேற்று முன்தினம் லிட்டருக்கு ரூ.75.19-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று இது மேலும் 20 காசு உயர்ந்து ரூ.75.39 ஆக புதிய உச்சம் தொட்டது.

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்து உள்ளது.

அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது. இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில் “பெட்ரோல், டீசல் விலை இடைவிடாது உயர்ந்து வருகிறது. இது தவிர்க்க முடியாதது அல்ல. பெட்ரோல், டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பு, விலை நிர்ணயித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வரிகளைக் குறைத்தால், விலைகள் குறையும்” என குறிப்பிட்டார்.

ஆனால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கை விரித்து விட்டது.

இதுபற்றி மத்திய அரசின் நிதி அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்படும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்து உள்ளோம். நடப்பு கணக்கில் பற்றாக்குறை ஏற்படுகிறபோது, நாங்கள் நிதிப்பற்றாக்குறையில் கை வைக்க முடியாது. அதுவும் உற்பத்தி வரியை குறைத்து, நிதிப்பற்றாக்குறையில் பிரச்சினை ஏற்படுத்த முடியாது” என கூறினார்.

(அன்னியச்செலாவணி வரவை விட, அதன் செலவு அதிகரிப்பதால் ஏற்படுவது நடப்பு கணக்கு பற்றாக்குறை; வருமானத்தை விட செலவு அதிகரிப்பதால் ஏற்படுவது நிதிப்பற்றாக்குறை,)

நிதி அமைச்சக அதிகாரி மேலும் கூறும்போது, “அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து உள்ளதால் இறக்குமதி செலவு அதிகரிக்கிறது. ஏற்கனவே நிர்ணயித்து உள்ள இலக்கை விட நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைத்து, நிதிப்பற்றாக்குறையில் கை வைக்க இயலாது” என்று குறிப்பிட்டார்.

ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.19.48, ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.15.33 உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீது விதிக்கிற மதிப்பு கூட்டு வரி மாறுபடுகிறது. தமிழக அரசு பெட்ரோல் மீது 34 சதவீதமும், டீசல் மீது 25 சதவீதமும் மதிப்பு கூட்டு வரி (‘வாட்’ வரி) விதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்