ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டம்

ரூ. 7 ஆயிரம் கோடி செலவில் ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது.

Update: 2018-09-05 04:36 GMT
புதுடெல்லி,

ரூபாய் 7 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை இந்தியா வாங்க உள்ளது. மும்பைக்கும் குஜராத் மாநிலம் அகமதாபாத்துக்கும் இடையே புல்லட் ரயில் சேவையைத் தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஜப்பானின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் என்ற பெருமையை பெறுகிறது. வரும் 2022 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜப்பான் தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டு வரும் புல்லட் ரயில் மணிக்கு 508 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது.

ஜப்பானிடம் இருந்து 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா ஆயத்தமாகி வருகிறது. 10 பெட்டிகளை கொண்டதாகவும், மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய வகையிலும் ஜப்பானிடம் இருந்து வாங்க உள்ள புல்லட் ரயில் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கான டெண்டர்  விரைவில் வெளியிடப்படும் என்றும் இதில் ஜப்பான் உற்பத்தியாளர்கள் பங்கேற்பர் என்றும் கூறப்படுகிறது.

சுமார் 7 ஆயிரம் கோடி செலவில், 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. புல்லெட் ரயிலில், சாதாரண வகுப்புக்கான கட்டணம் ரூ.3 ஆயிரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானங்களுக்கு இணையான சொகுசு வசதிகளுடன் கூடிய முதல் வகுப்பு பெட்டியும் இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்