தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டால் பிற மாநிலங்களுடன் தேர்தலை நடத்தலாம் - முன்னாள் தேர்தல் ஆணையர்

தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டால் பிற மாநிலங்களுடன் தேர்தலை நடத்தலாம் என முன்னாள் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.

Update: 2018-09-05 12:25 GMT
ஐதராபாத்,

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் வரும் நவம்பர்-டிசம்பரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி அரசு நடைபெற்று வருகிறது. மாநில சட்டசபையின் ஆய்வு காலம் அடுத்தவருடம் ஏப்ரலுடன் முடிவுக்கு வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுடன் அங்கு தேர்தல் நடைபெறும். ஆனால் மாநிலத்தில் முன்கூட்டியே சட்டசபையை கலைத்துவிட்டு, தேர்தலை சந்திக்க தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி முடிவு எடுத்துள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது, சட்டசபையை கலைப்பது தொடர்பான மசோதாவை கொண்டுவருவது தொடர்பான பரிந்துரை மேற்கொள்ளப்படலாம் என தெரிகிறது. இதற்கிடையே தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் ஒருவர் பேசுகையில், “முதல்வர் சட்டசபையை கலைப்பதற்கான பரிந்துரையை முன்மொழிவது தொடர்பாக பரிசீலனை செய்யலாம்,” என கூறியுள்ளார். 

மாநிலத்தில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் போது சட்டசபை தேர்தல் நடத்தப்படுவதை பிரிக்கவேண்டும் என முதல்வர் விரும்புவதாக தெரிகிறது.

இந்நிலையில் தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டால் பிற மாநிலங்களுடன் தேர்தலை நடத்தலாம் என முன்னாள் தேர்தல் ஆணையர் கூறியுள்ளார்.   

 “முதல்வரால் மாநில சட்டசபை கலைக்கப்பட்டால், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் போது தெலுங்கானாவிலும் தேர்தலை நடத்துவதை தேர்தல் ஆணையம் கவனத்தில் எடுக்கவேண்டும்,”என கூறியுள்ளார் முன்னாள் தேர்தல் ஆணையர் கிருஷ்ணமூர்த்தி. 4 மாநில தேர்தலை அறிவிப்பதற்கு முன்னதாக தெலுங்கானா சட்டசபை கலைக்கப்பட்டால், போதிய நேரம் கிடைத்தால் ஒன்றாக தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்னர் சட்டசபை கலைக்கப்பட்டால், தேர்தலை ஒன்றாக நடத்துவது என்பது தேர்தல் ஆணையத்திற்கு கடினமான பணியாகும் என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்