பொருளாதாரம் சீர்குலைந்து போனதற்கு ரகுராம் ராஜன் மீது பழிசுமத்துவதா? மத்திய அரசு மீது சிவசேனா பாய்ச்சல்

நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசை பொறுப்பாக்குவதா? என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது.

Update: 2018-09-05 13:54 GMT
 மும்பை,

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு சில நாள்களுக்கு முன்பு அறிவித்தது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். 

இந்நிலையில் நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் பேசுகையில், கடந்த இரு ஆண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கடைப்பிடித்த தவறான கொள்கைகள்தான் காரணம். ஏனெனில், அவரது தவறான கொள்கைகளால் பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன் வெகுவாக அதிகரித்தது. இதனால், ஒரு கட்டத்தில் தொழில் தொடங்குவதற்கு புதிய கடன் வழங்குவதை வங்கிகள் நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 8 காலாண்டுகளாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டது. அதே காலகட்டத்தில் ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதால், அதை சிலர் காரணமாகக் கூறினர். 

ஆனால், உண்மையில் ரகுராம் ராஜனின் தவறான கொள்கைகள்தான் நாட்டின் பொருளாதாரத்தில் பிரச்னை ஏற்படக் காரணம். என்று கூறினார்.  

நாட்டின் பொருளாதார சீர்குலைவுக்கு முந்தைய காங்கிரஸ் அரசை பொறுப்பாக்குவதா? என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா கண்டனம் தெரிவித்து உள்ளது. சிவசேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய பா.ஜனதா அரசை கடுமையாக தாக்கி விமர்சனம் செய்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. 

பா.ஜனதா எதிர்க்கட்சியாக இருந்த போது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் நாட்டின் புகழும் சரிகிறது என்று கூறுவதை வழக்கமாக கொண்டு இருந்தது. இப்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ.100 ஆக வீழ்ச்சி அடையும் நிலையில் உள்ளது. இதனால் நாட்டின் மதிப்பு உயர்ந்து விட்டதா?. நாட்டின் பொருளாதாரம் மரண படுக்கையில் உள்ளது. ஆனால் உலகின் 6-வது பெரிய பொருளாதார நாடு என்று கூறிக்கொள்வது நகைப்பூட்டுவதாக உள்ளது. 

உயர்மதிப்புடைய ரூபாய் நோட்டு மதிப்பு நீக்க முடிவை எதிர்த்தார். மத்திய அரசு விளம்பரத்துக்காக கோடிக்கணக்கில் செலவு செய்வதை எதிர்த்தார் என்பதற்காக ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன்தான் வாராக்கடன் அதிகரிப்புக்கு காரணம், பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் என்று நிதி ஆயோக் மூலம் மத்திய அரசு குற்றம்சாட்டுகிறது. ரூபாய் நோட்டு மதிப்பு நீக்கம் என்பது அரசாங்கம் நடத்திய கொள்ளை என்று ரகுராம் ராஜன் குற்றம் சாட்டினார். அதிகாரத்தில் இருப்பவர்கள் பொய் சொல்பவர்களாகவும், தன்னுடைய சுயபிம்பத்தை உயர்த்திக்கொள்ள விளம்பரம் செய்வதில் பசியோடு இருக்கிறார்கள் என்று சாடினார் அதனால், அவர் அனுப்பப்பட்டார்.
 
நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து போனதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு தான் பொறுப்பு என்று பதிலடி கொடுப்பதிலேயே பிரதமர் மோடி நேரத்தை விரயம் செய்கிறார். அவர் கடந்த 4 ஆண்டுகள் ஆட்சியை நடத்தி உள்ளார் என்பதை மறந்து விட்டு இவ்வாறு பேசுவதா?

பெட்ரோல், டீசல் விலை வானத்தை நோக்கி பறக்கிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ விரைவில் தொட இருக்கிறது. வேலைவாய்ப்பு இன்மையால் இளைஞர்கள் வீதிக்கு தள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் மகிழ்ச்சியாக இல்லை. உணவு பொருட்களின் விலை எகிறி விட்டது. சமையல் கியாஸ் விலையும் அதிகரித்து வருகிறது. புதிய முதலீடுகள் சரிகிறது. 

இதனால் நாட்டில் நிலையற்ற தன்மை நிலவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்