லாலு பிரசாத்தின் கோரிக்கையை ஏற்று சிறப்பு வார்டுக்கு அனுமதி அளித்த சிறை நிர்வாகம்

இரவு முழுவதும் நாய் குரைப்பதால் தன்னை சிறப்பு வார்டுக்கு மாற்றுமாறு லாலு பிரசாத் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி அவருக்கு சிறப்பு வார்டு வழங்கப்பட்டுள்ளது. #LaluPrasadh

Update: 2018-09-06 03:30 GMT
ராஞ்சி,

ராஷ்ட்டிரிய ஜனதா தளக்கட்சியின் மூத்த தலைவர் லாலு பிரசாத் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வருகிறார். இந்நிலையில் நெஞ்சு வலி மற்றும் குறைந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை பிரச்சனையால் கடந்த சில வாரங்களாக மும்பை ஆசியன் இருதய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த லாலு, கடந்த 25-ந் தேதி சிகிச்சை முடிந்து சிறைக்கு திரும்பினார். இதனிடையே ராஞ்சியிலுள்ள ரிம்ஸ் என்றழைக்கப்படும் ராஜேந்திர மருத்துமனை நிறுவனத்தில் மீண்டும் அனுமதிக்கப்பட்ட லாலு, சிறை அதிகாரிகளின் காவலில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இதனிடையே, லாலு பிரசாத் இரவு முழுவதும் நாய் குரைப்பதால் தான் தூங்க முடியவில்லை. மேலும் கொசுக்களும் கடிக்கின்றன. எனவே தன்னை சிறப்பு வார்டுக்கு மாற்றக்கோரி மருத்துவமனை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் பிர்ஷா முண்டா மத்திய சிறை அதிகாரிகளிடம் தெரிவிக்க, அவர்கள் அறையை மாற்ற ஒப்புதல் அளித்தனர்.

இதன்படி நேற்று மாலை லாலு பிரசாத் தான் சிகிச்சை பெற்று வரும் அறையிலிருந்து, குளிரூட்டப்பட்ட வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்காக லாலுவிடமிருந்து நாள் ஒன்றுக்கு ரூ.1000 கட்டணம் வசூலிப்படும். மேலும் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. 

70 வயதாகும் லாலு பிரசாத், நான்கு மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



மேலும் செய்திகள்