எஸ்.சி/எஸ்.டி சட்ட விவகாரம்: நாடுதழுவிய முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு

எஸ்.சி/எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.

Update: 2018-09-06 05:15 GMT
புதுடெல்லி,

எஸ்.சி,எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன்  உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.சி.,எஸ்.டி. சட்டத்தின்கீழ் புகார் அளித்தால், உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் தீவிர விசாரணைக்கு பின்பே கைது செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது. 

வன்கொடுமை சட்டத்தை நீர்த்து போகச்செய்யும் வகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பு அமைந்து இருந்ததாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், கடும் அழுத்தத்துக்குள்ளான மத்திய அரசு, அண்மையில் நடந்து முடிந்த மழைக்கால கூட்டத்தொடரில்,  எஸ்.சி,எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்து நிறைவேற்றியது. 

இந்த நிலையில், எஸ்.சி,எஸ்.டி சட்டத்தில் திருத்தம் செய்ததற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் இன்று நாடு தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளன. இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பீகார் மற்றும் மத்திய பிரதேசத்தில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் 35 மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மத்திய பிரதேசத்தில் இன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பெட்ரோல் பங்குகள் மூடப்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. பீகாரின் பாட்னாவில் உள்ள ராஜேந்திர நகர் டெர்மினல் ரயில் நிலையத்தில்  ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மராட்டிய மாநிலத்திலும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகள்