ஐஏஎஸ் அதிகாரி என்பதையே மறைத்து 8 நாட்கள் வெள்ள மீட்புப்பணிகளில் ஈடுபட்டவர்

தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதையே மறைத்து 8 நாட்கள் வெள்ள மீட்புப்பணிகளில் ஒருவர் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-09-06 10:00 GMT

திருவனந்தபுரம்

கேரள மாநிலம் 100 ஆண்டுகள் சந்திக்காத கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது. 488 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் அங்கு உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்தனர். வெள்ள பாதிப்பில் இருந்து கேரள மக்கள் இன்னும் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த வெள்ளம் அங்கு இருந்தவர்களின் பிரபலங்கள் என்ற எண்ணம், மத உணர்வு, சாதிய உணர்வு என அனைத்தையும் தகர்த்து ஒன்றாக இணைத்தது. பலரும் களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். ராணுவப்படையினரும், கேரள மீனவர்களும் தக்க சமயத்தில் வெள்ளத்தை வென்று மக்களை மீட்டனர். அவர்களின் தியாகம் ஈடுசெய்ய முடியாது.

அந்த வகையில் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் 8 நாட்களாக நிவாரண முகாம்களில் தான் யார் என்பதையே மறைத்தும் மறந்தும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றான தத்ரா மற்றும் நாகர் ஹாவேலியில் ஐஏஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கண்ணன் கோபிநாத். இவர் தங்கள் பிரதேசத்தின் சார்பில் கேரளாவிற்கு வழங்கப்பட்ட ரூ.1 கோடியை கேரள முதலமைச்சரிடம் ஒப்படைப்பதற்காக கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி கேரளா வந்துள்ளார். 

இவரது வீடு கேரளாவின் புதுபள்ளியில் உள்ளது. பணத்தை ஒப்படைத்த பின்னர் அங்கு செல்லலாம் என்று நினைத்துக்கொண்டு வந்த இவர், கேரளாவின் நிலையை பார்த்துவிட்டு நேராக திருவனந்தபுரம் சென்றுள்ளார். அங்கிருந்து பல முகாம்களுக்கு சென்ற அவர் தொடர்ந்து 8 நாட்களாக தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்பதையே மறைத்துமீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளார். பின்னர் 9ஆம் நாள் தனது ஐஏஎஸ் பணிகளை தொடர அங்கிருந்து சத்தமின்றி புறப்பட்டுச்சென்றுள்ளார்.

கேரளா வந்த அடுத்த நாளே மீட்புப்பணிகளுக்காக கண்ணன் விடுப்பு பெற்றுவிட்டார். ஆனால் அவர் மீட்புப்பணியில் ஈடுபடுகிறார் என்பதை அறிந்த அரசு நிர்வாகம், அவரது விடுப்பு நாட்களை வேலை செய்த நாட்களாக கணக்கெடுத்துக்கொண்டது.

மேலும் செய்திகள்