தேர்தலுக்கு தயாராகும் பாஜக: செப்.15-ல் தெலுங்கனாவில் தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார் அமித்ஷா

தெலுங்கனாவில் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி அமித்ஷா தேர்தல் பிரசாரத்தை துவக்குகிறார்.

Update: 2018-09-08 11:42 GMT

ஐதராபாத்,

தெலங்கானாவில் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. அங்கு முதல்வராக சந்திரசேகர் ராவ் இருந்து வந்தார். 
அவரின் ஆட்சி முடிய இன்னும் 9 மாதங்கள் வரை இருக்கும் சூழலில் முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கில் சட்டப்பேரவையைக் கலைத்து அறிவித்தார். அதற்கு ஆளுநர் ஈ.எல்.நரசிம்மனும் ஒப்புதல் அளித்தார். தற்போது காபந்து முதல்வராக சந்திரசேகர் ராவ் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு இறுதியில் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தும் போது தெலங்கானா மாநிலத்துக்கு சேர்ந்து நடத்திடவேண்டும் என்ற நோக்கில் சந்திரசேகர் ராவ் முன்கூட்டியே சட்டப்பேரவையைக் கலைத்து தேர்தலுக்கு தயாராகி இருக்கிறார். அதற்கு ஏற்றார்போல் 105 தொகுதிகளுக்கான வேட்பாளரையும் அறிவித்துவிட்டார்.

ஆனால் தேர்தல் ஆணையமோ தெலங்கானா மாநிலத்துக்கு எப்போது தேர்தல் நடத்துவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தது. ஆனால், அடுத்த முறையும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு தெலங்கானா ராஷ்டிர சமிதி தேர்தலை எதிர்கொள்கிறது.பாஜகவுடன், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து தேர்தலைச் சந்திக்கும் நோக்கில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையே தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சிக்குப் போட்டியாக பாஜகவும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. வரும் 15-ம் தேதியில் இருந்து பாஜக தலைவர் அமித் ஷாவும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாக அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் இன்று தெரிவித்துள்ளனர். வரும் 15-ம் தேதி மெகபூப் நகரில் தனது முதல் பிரச்சாரக் கூட்டத்தில் அமித் ஷா பேசவுள்ளார்.அதன் பின் நடக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், உள்ளிட்ட பலர் வந்து பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

மேலும் செய்திகள்