காஷ்மீர்: பயங்கரவாதி சுட்டுக் கொலை - போலீஸ்காரர் படுகாயம்

காஷ்மீரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் போலீஸ்காரர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.

Update: 2018-09-08 17:40 GMT
ஸ்ரீநகர்,

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள அச்சாபால் என்னும் இடத்தில் நேற்று இரவு ராணுவ வீரர்களுடன் இணைந்து உள்ளூர் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதி ஒருவன் போலீசாரை நோக்கி எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் ஒரு போலீஸ்காரர் பலத்த காயம் அடைந்தார்.

இதையடுத்து ராணுவ வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இதில் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டான். அவன் குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த பிலால் அகமது என்பதும், லஷ்கர் இ–தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவன் என்பதும் தெரிய வந்தது.

படுகாயம் அடைந்த போலீஸ்காரர் உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்