பாகிஸ்தானின் 13-வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி பதவி ஏற்றார்
பாகிஸ்தான் நாட்டின் 13-வது ஜனாதிபதியாக ஆரிப் ஆல்வி பதவியேற்றுக் கொண்டார்.
இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்தவர் ஆரிப் ஆல்வி (வயது 69). இவர் தந்தையை போன்று பல் மருத்துவராக உள்ளார். இவரது தந்தை டாக்டர் ஹபீப் உர் ரகுமான் இலாஹி ஆல்வி ஆவார். தேச பிரிவினைக்கு முன் இவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பல் மருத்துவராக விளங்கினார். அப்போது அவருக்கு நேரு எழுதிய கடிதங்களை குடும்பத்தினர் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர்.
டாக்டர் ஹபீப் உர் ரகுமான் இலாஹி ஆல்வி, பாகிஸ்தானின் தேசத்தந்தை என்று அழைக்கப்படுகிற முகமது அலி ஜின்னா குடும்பத்துக்கும் நெருக்கமானவர் என தகவல்கள் கூறுகின்றன.
ஆரிப் ஆல்வியின் முழுப்பெயர் டாக்டர் ஆரிப் உர் ரகுமான் ஆல்வி ஆகும். இவர் கராச்சியில் பிறந்தவர் ஆவார்.
பாகிஸ்தான் அதிபராக உள்ள மம்னூன் உசைனின் பதவி காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. பதவிக்காலம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, தேர்தல் நடந்தது. இதில், பிரதமர் இம்ரான்கானுக்கு நெருக்கமான ஆரிப் ஆல்வி வெற்றி பெற்றார்.
இந்த நிலையில், அதிபர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பாகிஸ்தான் நாட்டின் 13-வது ஜனாதிபதியாக ஆல்வி பதவியேற்றுக்கொண்டார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஷாகிப் நிசார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் இம்ரான் கான், ராணுவ தளபதி கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் வெளிநாட்டு தூதர்கள் கலந்து கொண்டனர்.