தலைவரும், கொள்கையும் கிடையாத எதிர்க்கட்சிகளின் இலக்கு மோடியை நிறுத்த வேண்டும் என்பதுதான் - பா.ஜனதா

தலைவரும், கொள்கையும் கிடையாத எதிர்க்கட்சிகளின் இலக்கு மோடியை நிறுத்த வேண்டும் என்பதுதான் என பா.ஜனதா கூறியுள்ளது.

Update: 2018-09-09 10:32 GMT
புதுடெல்லி,

2019 பாராளுமன்றத் தேர்தலிலும் பா.ஜனதா மிகப்பெரிய மெஜாரிட்டியுடன் வெற்றியடையும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். 

பா.ஜனதாவின் தேசிய நிர்வாகிகள் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட தீர்மானத்தில், 2022-க்குள் புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று  மீண்டும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்கால் அரசியல் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நரேந்திர மோடி மிகவும் பிரபலமான தலைவராக உள்ள நிலையில் எதிர்க்கட்சிகளிடம் தலைவரும் கிடையாது. கொள்கையும் கிடையாது. பா.ஜனதாவை வீழ்த்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் திட்டம் ஒரு பகல் கனவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பா.ஜனதா அரசால் கடந்த 4 ஆண்டுகள் அதிகமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2022க்குள் புதிய இந்தியா உருவாக்கப்படும். பா.ஜனதா அரசிடம் தொலைநோக்கு பார்வை, ஆர்வம் உள்ளது, இந்த அரசின் செயல்பாட்டை பார்க்க முடியும். 2022-க்குள் இந்தியாவில் பயங்கரவாதம் இருக்காது, ஜாதியம் மற்றும் வகுப்புவாதம் இருக்காது, யாரும் வீடு இல்லாமல் இருக்க மாட்டார்கள்,” என்று கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளை குறிப்பிட்டு கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தில், எதிர்க்கட்சிகளிடம் எந்த கொள்கையும் கிடையாது, திட்டமும் கிடையாது, வியூகமும் கிடையாது என கூறப்பட்டுள்ளது.

 எதிர்க்கட்சிகளின் ஒரே நிகழ்ச்சி நிரல் பிரதமர் மோடியை நிறுத்த வேண்டும் என்பது மட்டும்தான் என கூறியுள்ளார் ஜவடேகர். 

மேலும் செய்திகள்