ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் வழக்கை நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான தமிழக அரசின் வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.

Update: 2018-09-09 13:51 GMT

புதுடெல்லி,


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக வேதாந்தா குழுமம் டெல்லி தேசிய பசுமைத் தீர்ப்பாயம் சென்றது. அப்போது, ஸ்டெர்லைட் ஆலைக்குள் அதன் நிர்வாகப் பிரிவு அலுவலகம் செயல்படலாம் என்று அனுமதியளிக்கப்பட்டது. ஆனால் எந்த விதமான உற்பத்தி பணிகளும் கண்டிப்பாக நடைபெறக் கூடாது என உத்தரவிட்டது.

ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்கக் கோரி வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனு குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்தது. குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே.வசீப்தர் செயல்படுவார். இந்த குழுவில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள். இந்த குழு 2 வாரங்களில் பொறுப்பேற்று கொண்டு, 6 வாரங்களில் ஆய்வுகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்றது.

இதற்கிடையே ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்தது. இப்போது நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்