டெல்லியில் விஷவாயு தாக்கி 5 பேர் உயிரிழப்பு
டெல்லியில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். #DelhiWorkers
புதுடெல்லி,
தேசிய தலைநகர் டெல்லியிலுள்ள மோதி நகர் பகுதியிலிருக்கும் டி.எல்.எஃப் அடுக்குமாடி குடியிருப்பில் 5 துப்புரவு பணியாளர்கள் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட 3 பேர் டெல்லியிலுள்ள தீன் தயாள் உபத்யாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் நச்சு வாயு தாக்குதலால் சிகிச்சை பலனின்றி 3 பேரும் பலியாகினர். இறந்தவர்கள் அனைவரும் 22 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் ஆவார்.
இதனிடையே நச்சு வாயு தாக்கி 5 பேர் உயிரிழந்தது குறித்து பாஜக கட்சியைச் சேர்ந்த பாரத் பூஷன் மாதன் கூறுகையில், டெல்லியில் இது போன்ற சம்பவம் நடைபெறுவது இது முதல் முறையல்ல. ஆம் ஆத்மி அரசாங்கம் தான் இச்சம்பவத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகபடுத்துவோம் என உறுதியளித்த இந்த அரசாங்கம், பல உயிரிழப்புகளுக்கு பின்னரும் பழைய நுட்பங்களையே உபயோகப்படுத்துகிறது எனக் கூறினார்.