பாரத் பந்த் காரணமாக 12 ரெயில்களின் இயக்கம் ரத்து

பாரத் பந்த் காரணமாக 12 ரெயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு கடற்கரை மண்டல ரெயில்வே (ECR) தகவல் தெரிவித்துள்ளது. #BharatBandh

Update: 2018-09-10 05:23 GMT
புதுடெல்லி,

வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. இதேபோல் இடதுசாரிகள் கட்சிகள் சார்பிலும் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்கள் மறியல் நடத்தப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில்  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக  கண்டனப்பேரணி நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன், டெல்லியில் ராஜ்காட்டில்  உள்ள காந்தி நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  பின்னர் ராஜ்காட்டில் இருந்து ராம்லீலா மைதானம் வரை ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 

இதனிடையே பாரத் பந்த் காரணமாக புவனேஷ்வர்-ஹவுரா ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் மற்றும் புவனேஷ்வர்- விசாகப்பட்டினம் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் என 12 ரெயில்களின் இயக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு கடற்கரை ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது. பந்த் காரணமாக பீகாரில் கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மும்பையிலுள்ள அந்தேரி ரெயில் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. ராஜஸ்தான், குஜராத், சத்தீஷ்கர், ஒடிசா என பல மாநிலங்களில் பார்த் பந்த் போராட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் பாரத் பந்த் போராட்டம் நடைபெற்றாலும், இன்றும் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மேலும் உயர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்