பெட்ரோல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என பா.ஜனதா கூறுவது மிகப் பெரிய நகைச்சுவை! காங்கிரஸ்
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை என காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். #BharathBandh
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வில் அரசின் பங்கு எதுவும் கிடையாது என பா.ஜனதா கூறியது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தன்னுடைய கருத்தை டுவிட்டரில் வரிசையாக பதிலிட்டுள்ளார்.
அதில், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அரசு பொறுப்பில்லை என்று பாஜக கூறுவது இந்த ஆண்டின் மிகப் பெரிய நகைச்சுவை!. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு விதித்துள்ள கொடுமையான வரிகள் தான் விலை உயர்வுக்குக் காரணம் என்பதைச் சிறு பிள்ளைகள் கூட அறிவார்கள். பெட்ரோல், டீசல் பொருட்களை ஜிஎஸ்டி வரி முறையின் கீழ் கொண்டு வருவதற்கு ஏன் மத்திய அரசு முரட்டுத்தனமாக மறுக்கிறது? கச்சா எண்ணெய் விலை ரூ.107 ஆக இருந்த போது விலை குறைவு. இப்பொழுது கச்சா எண்ணெய் விலை ரூ. 78 ஆக இருக்கும் போது விலை உயர்வு! ஏன்? ஏன்? என கேள்வியை எழுப்பியுள்ளார்.