சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்ய இன்டர்போலுக்கு மீண்டும் நினைவூட்டிய அமலாக்க துறை
பஞ்சாப் நேசனல் வங்கி பணமோசடி வழக்கில் மெகுல் சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்ய இன்டர்போலுக்கு அமலாக்க துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
புதுடெல்லி,
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிரவ் மோடிக்கு எதிராக நிதி மோசடி தடுப்பு சட்டம் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்த வழக்கில் நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்சி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் இருவரும் ஜனவரி முதல் வாரத்தில் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டனர்.
நிரவ் மோடி, அவரது சகோதரர் நீஷல், அவரது சகோதரி பூர்வி மோடி, அவரது நிறுவனத்தின் உயரதிகாரிகள் சுபாஷ் பரப் மற்றும் மிஹிர் பன்சாலி ஆகியோருக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கில் சோக்சிக்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் அமலாக்க துறை குற்ற பத்திரிகை தாக்கல் செய்தது. அதன்பின்னர் கடந்த ஜூனில், சோக்சிக்கு எதிராக கைது வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கும்படி இன்டர்போலுக்கு அமலாக்க துறை வேண்டுகோள் விடுத்தது.
சோக்சிக்கு எதிரான இந்த வழக்கில் கூடுதல் விவரங்கள் அளிக்கும்படி இன்டர்போல் கேட்டிருந்தது. இதற்கு உரிய பதில் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் உள்ள இன்டர்போல் அமைப்பு வழியே, சோக்சிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் தாக்கல் செய்ய மீண்டும் அமலாக்க துறை நினைவூட்டியுள்ளது.