ராஜஸ்தானைத் தொடர்ந்து ஆந்திராவில் பெட்ரோல், டீசல் மீதான வரி ரூ.2 குறைப்பு

ராஜஸ்தானைத் தொடர்ந்து, ஆந்திர மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.2 வீதம் குறைத்தது.

Update: 2018-09-10 20:45 GMT
அமராவதி,

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த விலை உயர்வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது.

இதற்கிடையே, இந்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி (வாட்) வரி குறைக்கப்பட்டது. 4 சதவீதம் வரி குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அறிவித்தார்.

இதனால், அங்கு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறையும். விலை குறைப்பால், மாநில அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராஜஸ்தானைத் தொடர்ந்து, ஆந்திர மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்துள்ளது.

இதுகுறித்து ஆந்திர மாநில சட்டசபையில், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

மத்திய அரசுக்கு ஏராளமான வருவாய் வந்தபோதிலும், பெட்ரோல், டீசல் விலையை கடுமையாக உயர்த்தி, மக்களுக்கு கூடுதல் சுமையை ஏற்றி உள்ளது. ஆந்திர மாநிலத்தில், பெட்ரோல், டீசல் மீது 31 சதவீத ‘வாட்’ வரியும், கூடுதல் வரியாக லிட்டருக்கு 4 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த கூடுதல் வரியை 2 ரூபாய் குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இது, செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் அமலுக்கு வரும். மாநில அரசு பற்றாக்குறை பட்ஜெட்டை சந்தித்து வருகிறது. இருப்பினும், மக்களின் சுமையை குறைக்கும்வகையில், இந்த முடிவை எடுத்துள்ளோம். இதனால், மாநில அரசுக்கு ஆயிரத்து 120 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும். இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

மேலும் செய்திகள்