நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை வீழ்த்தும் - ராகுல்காந்தி ஆவேச பேச்சு

அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை வீழ்த்தும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார்.

Update: 2018-09-10 23:30 GMT
புதுடெல்லி,

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் நேற்று ‘பாரத் பந்த்’ என்னும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதையொட்டி டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடந்த கண்டன கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அகமது பட்டேல், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், ஆம் ஆத்மியின் சஞ்சய் சிங், லோக் தந்திரிக் ஜனதாதளம் தலைவர் சரத்யாதவ், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுகேந்து சேகர் ராய் மற்றும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட 20 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

முன்னதாக கயிலாய மானசரோவர் புனித யாத்திரை முடிந்து டெல்லி திரும்பிய ராகுல்காந்தி நேற்று காலை ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்றார். அங்கு மானசரோவர் ஏரியின் நீரை தெளித்து மரியாதை செய்தார்.

பின்னர் அங்கிருந்து காங்கிரஸ், எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் புறப்பட்டு ஊர்வலமாக ராம் லீலா மைதானத்துக்கு வந்தார்.

அங்கு அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டன கூட்டத்தில் பங்கேற்று ராகுல் காந்தி ஆவேசமாக பேசியதாவது:-

4 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பிரதமர் பதவி ஏற்றபோது கடந்த 70 ஆண்டுகளில் எதுவும் நடக்கவில்லை. அதை நாங்கள் 4 ஆண்டுகளில் முடித்துக் காட்டுவோம் என்றார். அவர் சொன்னது உண்மைதான். ஆம் கடந்த 4 ஆண்டுகளில் நடந்துள்ள அனைத்தும் அதற்கு முந்தயை 70 ஆண்டுகளில் எப்போதும் நிகழ்ந்திடாதவை ஆகும்.

இந்த 4 வருடங்களில் நாட்டு மக்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதை உங்களால் காண முடிகிறது. நீங்கள் எங்கே சென்றாலும் மத ரீதியாக, சாதி ரீதியாக மக்கள் பிளவுபட்டு இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்துக்கு எதிராக செயல்படுவதையும் காணலாம்.

எரிபொருளின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதுபற்றி பிரதமர் எதுவும் பேசாமல் மவுனம் சாதிக்கிறார். இதேபோல் ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடந்துள்ள ஊழல் பற்றி வாய்திறக்க மறுக்கிறார். விவசாயிகள் தற்கொலை, பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள், வேலைவாய்ப்பு பிரச்சினை ஆகியவை குறித்தும் எதுவும் பேசுவதில்லை.

பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. ஆனால் இதுபற்றி மோடி எதுவும் கூற மறுக்கிறார். 4 வருடங்களுக்கு முன்பு தேர்தல் பிரசாரத்தின்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கடுமையாக கண்டித்துப் பேசினார். இப்போதோ மவுனமாக இருக்கிறார்.

இங்கே அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் ஒரே மேடையில் அமர்ந்து இருக்கிறோம். இது எங்களிடையே இருக்கும் ஒற்றுமையை காட்டுகிறது. எங்களிடையே உள்ள சித்தாந்தங்களை பகிர்ந்து கொண்டு அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பா.ஜனதாவை வீழ்த்தும்.

நாட்டு மக்களின் துயரங்களையும், வேதனையையும் எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. ஆனால் மோடி இதுபற்றி எதையும் அறியாமல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. இதுதான் எதிர்க்கட்சிகளாகிய எங்களுக்கும் அவர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம். இந்த இடத்தில் இருந்து நாங்கள் உறுதியளிக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசும்போது, பொதுமக்கள் இந்த அரசின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர். விவசாயிகள், சிறு வணிகர்கள் மிகுந்த துயரத்தில் இருக்கின்றனர். வேலைவாய்ப்புகள் இல்லாமல் இளைஞர்கள் கவலையோடு காணப்படுகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள சிறுசிறு கருத்துவேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு பா.ஜனதா அரசுக்கு எதிராக போராட ஒருங்கிணையவேண்டும். நாட்டுக்கு நிறைய செய்து இருக்கிறோம் என்று மோடி அரசு கூறுகிறது. ஆனால் அது நாட்டின் நலன்களுக்கானது அல்ல. இந்த அரசு அனைத்து எல்லைகளையும் மீறி விட்டது. நமது ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் அனைவரும் தயாராவோம். இந்த அரசாங்கத்தை மாற்றுவதற்குரிய சரியான நேரம் விரைவில் வரும் என்றார்.

இந்த கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டாலும் உடல் நலக்குறைவு காரணமாக அவர் பேசவில்லை.

கூட்டம் தொடங்கியபோது 20 கட்சிகளின் தலைவர்களும் ஒன்றாக எழுந்து நின்று ஒருவருக்கொருவர் கைகோர்த்து மோடி அரசுக்கு எதிராக தங்களது ஒற்றுமையை காண்பித்தது, குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்