பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் குறைப்பு மேற்கு வங்காள அரசு நடவடிக்கை

மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் விலையை மம்தா பானர்ஜி அரசு குறைத்துள்ளது.

Update: 2018-09-11 10:43 GMT
கொல்கத்தா,

பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்த வண்ணம் இருக்கிறது. இந்த விலை உயர்வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் சார்பில் நேற்று நாடு தழுவிய முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, இந்த ஆண்டு சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி (வாட்) குறைக்கப்பட்டது. 4 சதவீதம் வரி குறைக்கப்படுவதாக அம்மாநில முதல்-மந்திரி வசுந்தரா ராஜே அறிவித்தார்.

இதனால், அங்கு பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.50 குறையும். விலை குறைப்பால், மாநில அரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்நிலையில், ராஜஸ்தானைத் தொடர்ந்து, ஆந்திர மாநில அரசும் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைத்தது. பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ.2 விலை குறைப்பு செய்யப்பட்டது. இதனையடுத்து மேற்கு வங்காள மாநில அரசும் விலை குறைப்பை அறிவித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தலா ஒரு ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்