பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றம் இல்லை

கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே விற்பனையாகிறது.

Update: 2018-09-12 01:34 GMT
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் தினந்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் லிட்டருக்கு ஒற்றை இலக்க பைசா அளவில் 2 பைசா, 5 பைசா என்ற அளவில் உயர்த்தப்பட்டு வந்தது. அதே அளவு அவ்வப்போது குறைக்கப்பட்டும் வந்தது.

ஆனால் சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவை சந்தித்து வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயர்வு இரட்டை இலக்க பைசாக்களில் 25 பைசா, 40 பைசா என்ற அளவில் தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இவற்றின் விலையை ஓரளவு குறைப்பதற்கு வசதியாக, மத்திய அரசு உற்பத்தி வரியை குறைக்க முடியாது என திட்டவட்டமாக கூறி விட்டது. மாநில அரசுகளும் மதிப்பு கூட்டு வரியை குறைக்க முன்வரவில்லை.

இப்படி பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து சாதாரண மக்களையும், வாகன ஓட்டிகளையும் வதைத்து வருகிற நிலையில், இது தொடர்பாகவோ, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றியோ பிரதமர் நரேந்திர மோடியும் சரி, பிற மத்திய மந்திரிகளும் சரி வாய் திறக்காமல் மவுனம் காத்து வருவது எதிர்க்கட்சிகளின் சாடலுக்கு வழி வகுத்து உள்ளது.

கடந்த சில நாட்களாக தினந்தோறும் விலை ஏற்றத்தை சந்தித்து புதிய உச்சத்தை எட்டிய பெட்ரோல், டீசல் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையிலேயே நீடிக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.05 காசுகளும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.13 க்கும் விற்பனையாகிறது. 

மேலும் செய்திகள்