இடது சாரி ஆர்வலர்களுக்கு விதிக்கப்பட்ட வீட்டுக்காவல் செப்.17 ஆம் தேதி வரை நீட்டிப்பு

மகாராஷ்டிர மாநிலம், பீமா - கோரேகானில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆர்வலர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை, வரும் 17-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-09-12 07:11 GMT
மும்பை,

மராட்டிய மாநிலம் கோரேகான்-பீமா கிராமத்தில் கடந்த டிசம்பர் மாதம் மராத்தா மற்றும் தலித் பிரிவினருக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரின் டெல்லி வீட்டில் சோதனையிட்ட போது, பிரதமர் மோடியை கொலை செய்ய மாவோயிஸ்டுகள் சதித்திட்டம் தீட்டிய கடிதம் கிடைத்தது.

இந்த கடிதத்தின் அடிப்படையில் ஐதராபாத், டெல்லி, அரியானா, சத்தீஷ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் மராட்டிய போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் மாவோயிஸ்டு ஆதரவாளர்கள் என கருதப்படும் வெர்னன் கோன்சால்வ்ஸ், அருண் பெரேரா, மனித உரிமை ஆர்வலர் கவுதம் நவலகா, புரட்சிகர இடதுசாரி எழுத்தாளர் வரவர ராவ், இடதுசாரி சிந்தனையாளரும், வக்கீலுமான சுதா பரத்வாஜ் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த கைது நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்களான ரோமிலா தாபர், பிரபாத் பட்நாயக் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்ட 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்குமாறு உத்தரவிட்டது. 5 பேரின் வீட்டுக்காவல் இன்றுடன் முடிய உள்ள நிலையில், வரும் 17 ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மேலும் செய்திகள்