தொழிற்சாலையில் மீத்தேன் எரிவாயு கொள்கலன் வெடித்து சிதறி விபத்து 6 பேர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் தொழிற்சாலையில் மீத்தேன் எரிவாயு கொள்கலன் வெடித்து சிதறி விபத்து நேரிட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.

Update: 2018-09-12 09:36 GMT
லக்னோ,

பிஜ்னோரில் உள்ள தனியார் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலையில் மீத்தேன் எரிவாயு கொள்கலனில் ஏற்பட்ட குறைபாட்டை சரிசெய்யும் பணி நடைபெற்றது. அப்போது எதிர்பாரத விதமாக கொள்கலன் வெடித்து சிதறியது. இந்த விபத்தில் அங்கு பணியிலிருந்த 6 பேர் உயிரிழந்தனர். 8 பேர் மிகவும் மோசமாக காயம் அடைந்துள்ளனர் என போலீஸ் தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தை அடுத்து மூன்று பேரையும் காணவில்லை. மாவட்ட எஸ்.பி. உமேஷ் குமார் சிங் பேசுகையில், மாயமானவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார். 

கொள்கலன் வெடித்து சிதறியதை அடுத்து தொழிலாளர்களின் உடல் விவசாய நிலங்களில் பல மீட்டர் தொலைவில் சிதறி கிடந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விபத்து நேரிட்டதும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அங்கு குவிந்தனர். மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது, மோசமான நிலை ஏற்படாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே கொள்கலனில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்ய போதுமான பாதுகாப்பு இல்லாமல் தொழிலாளர்களை சரிசெய்ய வற்புறுத்தப்பட்டதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொழிலாளர்களின் உயிரிழப்பிற்கு காரணமான தொழிற்சாலையின் உரிமையாளருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

 உயிரிழப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ள மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்