ரூபாய் மதிப்பு சரிந்து போய்விடாமல் தடுத்து நிறுத்த எல்லாம் செய்வோம் - நிதி அமைச்சகம்

ரூபாய் மதிப்பு நியாயமற்ற அளவுக்கு சரிந்து போய்விடாமல் தடுத்து நிறுத்த எல்லாம் செய்வோம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Update: 2018-09-12 13:26 GMT

புதுடெல்லி, 

பொருளாதார சரிவின் காரணமாக துருக்கியின் லிரா கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. ஈரான் ரியால் மதிப்பும் சரிவை சந்தித்துள்ளது.   இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.  

சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.72.91 ஆனது. வர்த்தக போர் அச்சம், வங்கிகள், இறக்குமதியாளர்கள் குறிப்பாக எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் இடையே அமெரிக்க டாலருக்கு ஏற்பட்டு உள்ள தொடர் கிராக்கி ஆகியவற்றின் காரணமாக ரூபாய் மதிப்பு சரிவை சந்தித்து வருகிறது என்று கூறப்படுகிறது. அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியுள்ளது. கடந்த சிலநாட்களாக ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவை சந்தித்து வருகிறது.’

இந்நிலையில் ரூபாய் மதிப்பு நியாயமற்ற அளவுக்கு சரிந்து போய்விடாமல் தடுத்து நிறுத்த எல்லாம் செய்வோம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி பற்றி மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ரூபாய் நியாயமற்ற அளவுக்கு சரிந்து போய்விடாமல் தடுப்பதை உறுதி செய்வதற்கு மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் எல்லாவற்றையும் செய்யும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்