பறிமுதல் செய்த 11 ஆயிரம் பாட்டில் பீரையும் எலி குடித்துவிட்டது - போலீஸ்

பீகாரில் பறிமுதல் செய்யப்பட்ட 11 ஆயிரம் பாட்டில் பீரையும் எலி குடித்துவிட்டது என போலீஸ் தெரிவித்துள்ளது.;

Update:2018-10-03 15:43 IST

பாட்னா,

பீகாரில் நிதிஷ் குமார் அரசு 2016-ம் ஆண்டு மதுவிலக்கை அமலுக்கு கொண்டுவந்தது. இதனையடுத்து மதுகுடிப்போர், விற்பனை செய்வோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வெளிமாநிலங்களில் இருந்து மது பாட்டில்கள் கடத்தல் அதிகரித்தது. இதனை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தமாக சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மது பாட்டில்கள் அழிக்கப்பட்டது.  இதுபோன்று சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டவர்களிடம் இருந்து மது, பீர் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 இதனை போலீஸ் கிடங்கில் பாதுகாப்பாக வைத்திருந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட உயர் அதிகாரிகளிடம் பேசிய நிதிஷ் குமார் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை அழித்துவிட உத்தரவிட்டார். கைமூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை அழிக்க மாவட்ட அதிகாரிகள் சென்றனர். அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிகாரிகள் கிடங்கை திறந்து பார்க்கையில் மது பாட்டில்கள் அனைத்தும் காலியாக இருந்தது. 

இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகள் பேசுகையில், மதுபாட்டில்கள் அனைத்தையும் எலி குடித்துவிட்டது என்று கூறியுள்ளனர். 

“கிடங்கில் சோதனையில் சிக்கிய 11 ஆயிரம் பீர் பாட்டில்கள் வைக்கப்பட்டது. மொத்தம் 16 லட்சம் ஐஎம்எல் மதுவும், 9 லட்சம் லிட்டர் உள்நாட்டு மதுவும் வைக்கப்பட்டு இருந்தது. இப்போது பீர் பாட்டில்களில் பீர் மாயமாகியுள்ளது, மற்ற பாட்டில்களிலும் மது காணப்படவில்லை. அனைத்திலும் சிறிய துளைபோடப்பட்டுள்ளது. பீர் அனைத்தையும் எலிகள் குடித்திருக்கலாம் என சந்தேகப்படுகிறோம்''  என்று கூறியுள்ளார் மாவட்ட அதிகாரி கல்பனா குமார். இதுபோன்று மதுவை எலி குடித்துவிட்டது என பீகாரில் அதிகாரிகள் கூறுவது ஒன்றும் புதியது கிடையாது. 2017-ம் ஆண்டும் இதுபோன்று மதுபாட்டில்களில் மது இல்லாத நிலையில் எலிகள் மீதே குற்றம் சாட்டப்பட்டது.

பீகாரில் மதுபானங்களுக்கு தடை விதித்ததில் எலிகள் மிகப்பெரிய பயனாளர்களாக இருக்கலாம்.

மேலும் செய்திகள்