நடிகர் ரஜினிகாந்த் நடித்து உள்ள 2.0 படத்தை திரையிடும் திரையரங்குகள் முன்பு போராட்டம் - வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் நடித்து உள்ள 2.0 படத்தை திரையிடும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று வாட்டாள் நாகராஜ் அறிவித்து உள்ளார்.

Update: 2018-11-09 19:26 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூருவில் பிற மொழி படங்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளதாகவும், தமிழ், இந்தி மொழி படங்கள் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் அதிக திரையரங்குகளில் வெளியாவதாகவும், இதனால் கன்னட திரையுலகம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் கன்னட அமைப்புகள் குற்றச்சாட்டு கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார் நடிப்பில் ரூ.600 கோடி செலவில் தயாராகி உள்ள 2.0 படம் வருகிற 29-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் பிற மொழி படங்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கோரி கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலக கட்டிடம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது வாட்டாள் நாகராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிற மொழி படங்கள் கர்நாடகத்தில் வெளியிடுவதை கட்டுப்படுத்த வேண்டும்.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 2.0 திரைப்படம் 29-ந் தேதி வெளிவருகிறது. இதற்காக கர்நாடகத்தில் அனைத்து திரையரங்குகளும் முன்பதிவு செய்யப்பட்டுவிடும். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் 2.0 படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பாக கன்னட கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு வாட்டாள் நாகராஜ் கூறினார்.


மேலும் செய்திகள்