புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் கைது

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-11-26 07:25 GMT
புதுச்சேரி,

சபரிமலையின் புனிதத்தை காக்கக்கோரியும், பக்தர்களிடம் கெடுபிடியாக நடந்துகொள்ளும் கேரள அரசை கண்டித்தும் பாரதீய ஜனதா கட்சி சார்பில் புதுவையில் இன்று முழுஅடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடப்பட்டது.

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி, இது கேரள மாநிலத்தில் உள்ள பிரச்சினை. இதற்காக புதுவையில் பந்த் போராட்டம் நடத்துவது தேவையற்றது.  யாராவது அதிகாரத்தை கையில் எடுத்து செயல்பட்டால் அவர்கள் மீது சட்டம் பாயும். கடைக்காரர்களை கடைகளை அடைக்க சொல்லி மிரட்டினால் கைது செய்யப்படுவார்கள் என கூறினார்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் போராட்ட அழைப்பினை அடுத்து புதுவையில் பெருமளவிலான தனியார் பேருந்துகள் இன்று இயங்கவில்லை.  பல தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

புதுச்சேரி மற்றும் தமிழக அரசு பேருந்துகள் போலீசார் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.  போராட்டத்தினால் வன்முறை ஏற்படாமல் தடுப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில், புதுவையில் தமிழக அரசு பேருந்துகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பேருந்துகளின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன.  இதனை தொடர்ந்து, கல்வீச்சில் ஈடுபட்ட 4 பா.ஜ.க.வினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து, புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டத்தில் பல்வேறு இடங்களில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டனர்.  கேரளாவில், மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தடுத்து நிறுத்தப்பட்டு அவமரியாதை செய்யப்பட்டார் என கூறி கோஷங்களை எழுப்பினர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர்.  இதனால்  போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.  அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.

மேலும் செய்திகள்