தெலுங்கானாவில் ஆட்சியை தக்கவைத்த சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்பு?

தெலுங்கானாவில் ஆட்சியை தக்கவைத்துள்ள சந்திரசேகர ராவ் நாளை பதவி ஏற்றுக் கொள்ளப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2018-12-11 08:32 GMT
ஐதராபாத்

தெலங்கானா, மத்தியபிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள சட்டசபை தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய நிலவரப்படி, ராஜஸ்தான், சத்தீஷ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று உள்ளது. மத்தியபிரதேசத்தில்  காங்கிரஸ்- பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

தென் இந்தியாவை பொருத்த வரை 119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா சட்டசபை தேர்தலில் சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி அதிக இடங்களை பெற்று முன்னிலை வகித்து வருகிறது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சி உள்ளது. 

119 சட்டசபை தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் ஆட்சி அமைக்க 60 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். தற்போதைய நிலவரப்படி, தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி 85 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 20 இடங்களிலும், பாஜக 2 இடங்களிலும் மற்றும் மற்றவர்கள் 6 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றனர்.
 
தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி கூட்டணி பெரும்பான்மையை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால், தெலுங்கானா மாநிலத்தில், மீண்டும் சந்திர சேகர ராவ் ஆட்சி அமைப்பது உறுதியாகி உள்ளது. நாளை வெற்றிபெறும் அனைத்து எம்எல்ஏ-க்களும்  ஐதராபாத்துக்கு வரும்படி ராஷ்டீரிய சமிதி கட்சி (டிஆர்எஸ்) சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில், நாளை தெலுங்கானா மாநிலத்தின் முதல்வராக மீண்டும் சந்திரசேகர ராவ் பதவியேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்