வீட்டை கவனித்துக்கொள்ள முடியாதவரால் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது: நிதின் கட்காரி
வீட்டை கவனித்துக்கொள்ள முடியாதவரால் நாட்டை நிர்வாகம் செய்ய முடியாது என நிதின் கட்காரி பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தில் பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- “ என்னைச் சந்தித்த பலரும், பாஜகவுக்காகவும், நாட்டுக்காகவும் தங்களது வாழ்க்கையை தியாகம் செய்ய விரும்புவதாக தெரிவித்தனர். அவர்களில் ஒருவரை நோக்கி, நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களது குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கின்றனர்? எனக் கேட்டேன். அதற்கு அவர், சொந்தமாக கடை வைத்திருந்ததாகவும், அது நன்றாக செயல்படாததால் மூடி விட்டதாகவும் குறிப்பிட்டார். தனக்கு மனைவியும், குழந்தையும் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதைக் கேட்ட நான், முதலில் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள் என்றேன். ஏனெனில், தனது குடும்பத்தை யாரால் சரியாக நிர்வகிக்க முடியவில்லையோ, அவரால் நாட்டையும் நிர்வகிக்க முடியாது. அதனால், குடும்ப பராமரிப்புக்கும், குழந்தைகளை நன்றாக வளர்க்கவும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதன்பிறகு, கட்சிக்காகவும், நாட்டுக்காகவும் பணியாற்றலாம்” என்றார்.