மத்திய அரசு முதன்முறையாக 20 ரூபாய்க்கான நாணயம் வெளியிட முடிவு

மத்திய அரசு முதன்முறையாக 20 ரூபாய்க்கான நாணயம் வெளியிட முடிவு செய்துள்ளது.

Update: 2019-03-07 09:06 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் புதிய வகையில் 1, 2, 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.  இந்த வரிசையில் 20 ரூபாய் நாணயம் வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இதுபற்றி நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த நாணயம் 8.54 கிராம் எடை கொண்டிருக்கும்.  இதன் வெளிப்புற விட்டம் 27 மி.மீட்டர் இருக்கும்.  இந்த நாணயத்தில் சிங்க தலையுடன் கூடிய அசோகா தூண் மற்றும் அதன்கீழ் சத்யமேவ ஜெயதே ஆகியவை பொறிக்கப்பட்டு இருக்கும்.  இதில் பாரத் என இந்தியிலும், இந்தியா என ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளது.

இதேபோன்று 10 ரூபாய் நாணயம் 7.74 கிராம் எடையுடன் வெளிப்புற விட்டம் 27 மி.மீட்டரும் கொண்டிருக்கும்.  5 ரூபாய் நாணயம் 6.74 கிராம் எடையுடன் வெளிப்புற விட்டம் 25 மி.மீட்டரும் கொண்டிருக்கும்.  புதிய வகை ஒரு ரூபாய் நாணயம் 3.09 கிராம் எடையும், 2 ரூபாய் நாணயம் 4.07 கிராம் எடையும் கொண்டிருக்கும்.

இந்த நாணயங்கள் அனைத்திலும் சிங்க தலையுடன் கூடிய அசோகா தூண் மற்றும் அதன்கீழ் சத்யமேவ ஜெயதே ஆகியவை பொறிக்கப்பட்டு இருக்கும்.  இந்த நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின்படி ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்