சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு: கேரள சட்டசபை முன் இந்து அமைப்பினர் போராட்டம்

சபரிமலை போராட்டக்குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபை முன் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

Update: 2019-04-14 01:56 GMT
திருவனந்தபுரம்,

சபரிமலையில் அனைத்து வயது பெண்களுக்கும் அனுமதி அளித்ததற்கு எதிராக கேரளா முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன் போராட்டங்கள் நடந்தன. ‘சபரிமலை கர்ம சமிதி’ என்ற அமைப்பின் கீழ் உள்ள பல்வேறு இந்து அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னின்று நடத்தின. இந்த போராட்டங்களில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களில் பலர் ஜாமீனில் வெளி வந்தனர்.

இவ்வாறு சபரிமலை விவகாரத்தில் போராடியவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்வதாக சபரிமலை கர்ம சமிதி குற்றம் சாட்டி உள்ளது. இந்த விவகாரத்தில் மாநில அரசை கண்டித்து நேற்று அந்த அமைப்பினர் நாம ஜெப போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவனந்தபுரத்தில் உள்ள மாநில சட்டசபை முன் நடந்த இந்த போராட்டத்தில் பல்வேறு இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று அய்யப்ப சரண கோ‌ஷங்களை எழுப்பினர்.

கேரளாவில் வருகிற 23–ந்தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மாநில அரசுக்கு எதிராக சபரிமலை போராட்டக்குழுவினர் நாம ஜெப போராட்டத்தை நடத்தியது மாநில அரசுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் செய்திகள்