உத்தரகாண்டின் ஹரித்வார் நகரில் கங்கை நதியில், கொரோனா விதிகளை காற்றில் பறக்க விட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட குவிந்தனர்.
ஹரித்வார்,
உத்தரகாண்டில் இந்த ஆண்டுக்கான கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக ஹரித்வாரில் உள்ள ஹர் கி பாவ்ரி பகுதியில் கங்கை நதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.
இதற்காக இன்று காலை 7 மணியில் இருந்து பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த மார்ச் 11ந்தேதி மகாசிவராத்திரியை முன்னிட்டு முதல் புனித நீராடும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து இன்று 2வது புனித நீராடல் நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து வருகிற 14ந்தேதி பக்தர்கள் அதிகம் கூடும் பெரிய அளவிலான 3வது புனித நீராடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
உத்தரகாண்டில் 1,08,812 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சூழலில், கும்பமேளா நிகழ்ச்சிக்கான ஐ.ஜி. சஞ்சய் கஞ்சியால் கூறும்பொழுது, கொரோனா விதிகளை முறையாக பின்பற்றும்படி மக்களிடம் நாங்கள் தொடர்ந்து கேட்டு கொள்கிறோம்.
ஆனால், மக்கள் திரளாக வந்து குவிகின்றனர். அதனால் இன்று அவர்கள் மீது அபராதம் விதிப்பது என்பது சாத்தியமில்லை. சமூக இடைவெளியை உறுதிப்படுத்துவதும் கடினம்.
நாங்கள் கட்டாயப்படுத்தி அதனை செய்ய முற்பட்டால் கூட்ட நெரிசல் ஏற்பட கூடிய சூழல் உருவாகும். அதனால், எங்களால் சமூக இடைவெளி உத்தரவை அவர்களிடம் கட்டாயப்படுத்த முடியவில்லை என கூறியுள்ளார்.